பாராட்டுங்கள்… பாராட்டுங்கள்..

November 23, 2009

நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம்.

ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. பொதுவாக காதலிக்கும்போது குறைகள் கூட நிறைகளாகத் தெரியும் என்பார்கள். அதுதான் திருமணத்திற்கு பின்பு பெரிய பிரச்சினைகளையும் கிளப்புகிறது. அதுவேறு கதை.

இங்கு நாம் சொல்ல வந்தது என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

பாராட்டுத்தான் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.

பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

Love is a Prayer JS

Castle of Saravanesh J

பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும்.

மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக.

அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நல்ல பலன் கிட்டும்.


சந்திரனில் தண்ணீர் இருக்கிறது* நாசாவும் தகவல்

November 15, 2009

வாஷிங்டன்:இந்தியாவின் சந்திரயானைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும், நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக அளவில் தண்ணீர் இருப்பதாக நாசா கூறியுள்ளது.

நிலவுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான் விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான மூலக் கூறுகள் இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டு பிடித்தது. இதையடுத்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், இதற்கான முயற்சிகளில் இறங்கியது.நிலவின் மேற்பரப்பில் ராக்கெட்டை மோதச் செய்து, அதனால் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் உள்ளதா என, கண்டறியும் சோதனையை, கடந்த மாதம் 9ம் தேதி நாசா மேற்கொண்டது.

இதில், தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து, நாசாவைச் சேர்ந்த அந்தோணி கொலாபிரட் கூறுகையில்,”"நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட 20 முதல் 30 மீட்டர் வரை ஆழமுள்ள பள்ளங்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட, குறிப்பிடத் தக்க அளவில் அதிக தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது முதல்கட்டமாக கிடைத்த தகவல் தான். ஆய்வு முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன,” என்றார்.

நாசா அதிகாரிகள் கூறுகையில்,”நிலவில் தண்ணீர் இல்லை. அது ஒரு வறட்சியான பிரதேசம் என, நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது. தற்போது அங்கு தண்ணீர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, உண்மையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ள உதவும்’ என்றனர்.


ஃப்ரூட் கேசரி

October 12, 2009

 ஃப்ரூட் கேசரி

தேவையான பொருட்கள்

  • ரவை – 1 டம்ளர்,
  • சர்க்கரை – 2 டம்ளர்,
  • கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன்,
  • ஏலக்காய் – 2,
  • முந்திரி – 5,
  • பாதாம் எசன்ஸ் – சில துளிகள்,(விருப்பப்பட்டால்)
  • ஆப்பிள் – சிறு துண்டு,
  • அன்னாசி – சிறு துண்டு,
  • பேரீச்சம் பழம் – 3,
  • பச்சை திராட்சை – 6,
  • ட்ரை ஃப்ரூட்ஸ் – 1 ஸ்பூன்,
  • நெய் – 1/2 டம்ளர்.
 

 

செய்முறை

  • ஆப்பிள், அன்னாசி, பேரீச்சம் பழம் எல்லாவற்றையும் பொடி துண்டுகளாக நறுக்கவும்.
  • 1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை ஒடித்து, வறுத்து எடுக்கவும்.
  • அதே நெய்யில் எல்லா பழ துண்டுகளையும், ட்ரை ஃப்ரூட்ஸையும் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டரை டம்ள்ர் தண்ணீர் விட்டு, கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, ரவையை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
  • ரவை வெந்ததும், சர்க்கரையை சிறுது சிறிதாக சேர்த்து, கட்டியின்றி கிளறவும்.
  • கேசரி கெட்டியாக வரும் போது, நெய், தூளாக்கிய ஏலக்காய், எசன்ஸ், பழ துண்டுகள், முந்திரி எல்லாம் போட்டு, கிளறி இறக்கவும்.

பீட்ரூட் அல்வா

October 5, 2009
தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2
பால் – 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் – 2 மேஜைக் கரண்டி
நெய் – 1/2 கோப்பை
ஏலக்காய் – 4
உலர்ந்த திராட்சை – 5
சர்க்கரை – 1 1/2 கோப்பை
வறுத்த முந்திரி – 10

செய்முறை

1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.

2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.

4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.


கல்கண்டு பொங்கல்

October 5, 2009

தேவையானவை

பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
பால் – 1 கப்
கல்கண்டு – 2 கப்
நெய் – கால் கப்
முந்திரி திராட்சை சேர்த்து ஒரு கைப்பிடி
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ – சிறிது

செய்யும் முறை

பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி குக்கரில் போ‌ட்டு, தேவையான அளவு பாலும், தண்ணீரும் ஊற்றி குழைய வேக வைத்து இறக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.

அதே வாணலியில் அரை கப் தண்ணீர் ஊற்றி ஒன்றும் பாதியுமாக பொடித்த கல்கண்டை போட்டு பாகு காய்ச்சவும்.

பாகு லேசாக கொதித்ததும் வெந்த அரிசி, பருப்பு கலவையை சேர்த்து கிளறவும்.

மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி கிளறி கெட்டியாக வரும்போது இறக்கவும்.

பிறகு முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்த்து கிளறி பரிமாறவும்.


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது

May 5, 2009

மங்கலநாண் சூடும் மதுரை மீனாட்சி: மதுரையில் மங்கல மீனாட்சி மங்கலநாண் சூடிக்கொண்ட நன்னாள் இன்று. வீட்டில் நம் பெற்றவர்களுக்கு நாம் சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் நம் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகளான நாமெல்லாம் இன்று திருக்கல்யாணம் நடத்தி மகிழ்ந்தோம்.

maduraimeenakshi

மலையத்துவஜனின் மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டிக்கு பட்டம் சூட்டினான் மன்னன். எட்டுத்திக்கும் வெற்றி நிலைநாட்ட திக்விஜயம் புறப்பட்டாள் தேவி. கயிலைநாதனைக் கண்டாள். தனக்குஉரிய மணாளன் இவரே என்று அறிந்தாள். நல்லநாளில் முகூர்த்த வேளையில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மைக்கும், அப்பனுக்கும்திருக்கல்யாண வைபவத்தை நிகழ்த்த மதுரையம்பதியில் எல்லா மக்களும் கூடினார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்க, சொக்கேசனின் கரம் பிடித்தாள்.

சக்தியில்லாமல் சிவமில்லை. சிவமில்லாமல் சக்தியில்லை. சக்தியும் சிவமும் இணைந்தால் தானே உலக இயக்கமே நடக்கிறது. இதை நமக்கு உணர்த்தவே அம்மையப்பராக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்துகிறோம்.

உலக உயிர்க்குலங்கள் அனைத்தும் உமையவளின் பிள்ளைகள். “”என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்பார் மணிவாசகப்பெருமான். ஆம்! நாம் கண்கள் பெற்ற பயனை, இன்று அம்மையப்பரை திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்ததன் மூலம் அடைந்திருக்கிறோம். அபிராமி பட்டர் தன் அந்தாதியில், “”கண்களிக்கும்படி கடம்பாடவியில் (கடம்பவனமாகிய மதுரையில்) கண்டேன்” என்று குறிப்பிடுகிறார். இத்தலத்தில் நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தையே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கருத வேண்டிஉள்ளது.

உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு. அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான். திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம்.

மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும். எல்லோராலும் கோயிலுக்குள் நுழைந்து மணக்கோலம் காண்பதென்பது நடக்கிற ஒன்றா! இதற்காகவே, புதுமாப்பிள்ளை சுந்தரேசர் இன்று இரவு யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் வலம் வந்து அருள் செய்வார்கள். நாம் நெரிசல் இல்லாமல் நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு அவர்களை வணங்கி மகிழ்வோமே!


மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

April 8, 2009

4

5

12

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் மார்ச் 26ல் துவங்கி தினம்தோறும் ஒவ்வொரு பூஜை நடைபெற்று வருகிறது. ஏப்.2ல் விநாயகர் வழிப்பாட்டோடு முதல் கால பூஜை துவங்கியது.

நாளை, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்த இயலாததால், நேற்று காலை 5 மணியில் இருந்து 6.30 மணி வரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, வெளி பிரகாரம், உள் பிரகாரம், 2ம் பிரகாரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பரிவார தெய்வங்களான வன்னி மரத்தடி விநாயகர், துர்க்கை, மகாலெட்சுமி, வீரபத்ரர் உட்பட பல்வேறு தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து விசேஷசந்தி, எட்டாம் கால பூஜையுடன் பூர்ணாஹ‌த்தி நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு விசேஷசந்தி மற்றும் ஒன்பதாம் கால பூஜை நடைபெற்றது. இன்று காலை 8.30 மணியில் இருந்து ‌சிற‌ப்பு யாக பூஜைக‌ள் நடைபெறு‌கி‌ன்றன.

நாளை காலை 9.15 மணிக்கு விமானம், ராஜகோபுரங்களுக்கு சமகால மஹா கும்பாபிஷேகமும், காலை 9.30 மணிக்கு மூலவர் மீனாட்சிக்கும், காலை 9.45 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி மாசி வீதி உலா வருதல் நடைபெறுகிறது


வேதங்கள் ஒலிக்க, திருமுறைகள் ஓத மதுரை மீனாட்சி கோயிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

April 8, 2009

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேதங்கள் ஒலிக்க, திருமுறைகள் ஓத கோலாகலமாக நடந்தது. இக்கோயில் திருப்பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6 கோடியில் துவங்கியது. தற்போது 320 உபயதாரர்கள் மூலம் ரூ.14 கோடிக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 30 கிலோ தங்கத்தில் அம்மன் சன்னதி கோபுரத்திற்கு தங்க கவசம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடி. கும்பாபிஷேக பூஜைகள் கடந்த மாதம் 26ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஏப்.,2ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. கோயில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சிரமம் என்பதால் ஏப்.,6ல் அம்மன், சுவாமி சன்னதிகளை சுற்றியுள்ள பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இதைதொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு பனிரெண்டாம்கால யாக பூஜை நடந்தது. 5 மணிக்கு ஐந்து ராஜகோபுரங்கள் உட்பட 14 கோபுரங்களுக்கு கும்பநீரை சிவாச்சாரியர்கள் எடுத்துச் சென்றனர். அம்மன், சுவாமி தங்க விமானத்தில் காலை 8 மணிக்கு கும்பநீர் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் நடந்தன. காலை 9.17 மணிக்கு அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் பச்சை கொடி காட்ட, “ஓம் நமசிவாயா’ என்று பக்தர்கள் முழங்க, ஒரே நேரத்தில் தங்க கோபுரங்கள் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் நீர் தெளிப்பான் இயந்திரங்கள் மூலம் புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்னர் மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. fpnmix_45882815123


‘மின் வினியோகம் கணிசமாக சீரடைந்துள்ளது’

January 22, 2009

சென்னை :”அரசு எடுத்துள்ள முயற்சிகளால், தமிழகத்தில் மின் வினியோகம் கணிசமான அளவுக்கு சீரடைந்துள்ளது’ என, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து கவர்னர் உரையில் இடம்பெற்ற அறிவிப்பு:தமிழகத்தில் தொழில் வளம் பெருகி வருவதால், மின் தேவை இரண்டு ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது.

தமிழக மின்வாரியத்தின் மின் நிலையங்களின் உற்பத்தியை திறம்பட நிர்வகித்தும், பிற மாநிலங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்தும் மின் வினியோகத்தை சீரமைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது. இதனால், கடந்த மாதம் முதல் மின் வினியோகம் கணிசமான அளவு சீரடைந்துள்ளது.மின் உற்பத்தியைப் பெருக்க, பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வடசென்னையில் 1,200 மெகாவாட் மற்றும் மேட்டூரில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் பணிகள், 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டுள்ளன.

“பெல்’ நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு உற்பத்தி நிலையங்களை நிறுவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.இவை தவிர, தற்போது முடிவடையும் நிலையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்காக 925 மெகாவாட் மின்சாரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 325 மெகாவாட் மின்சாரமும் இந்த ஆண்டு கிடைக்கும். இத்திட்டங்களின் மூலம் வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை முழுவதுமாக நிறைவடையும். இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.


5 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை

January 14, 2009

புதுதில்லி

ஐந்து முக்கிய் இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.

2011ஆம் ஆண்டு வரை, விப்ரோ டெக்னாலஜிஸ், மெகா சாப்ட், நெஸ்டர் பார்மாசூட்டிக்கல்ஸ், கேப் இண்டர்நேஷனல் மற்றும் சுரேந்திரா சிங் ஆகிய இந்த 5 நிறுவனங்களுக்கும் உலக வங்கி தடை விதித்து இருக்கிறது.

வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாலும், பல விதிமுறைகளை மீறி இருப்பதாலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அண்மையில், ரூ.7 ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடந்த இந்தியாவில் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்ய்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு உலக வங்கி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது